பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தின் காரணமாக, தென் அமெரிக்க நாடான பெருவில் (Peru) வரலாறு காணாத அதிகனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்நாட்டின் ஒட்டுமொத்த மாவட்டங்களில் சுமார் 40 சதவீதத்தைப் உள்ளடக்கிய 796 மாவட்டங்களில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தி பெரு நாட்டு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை காலமுறைப்படி வெப்பமடைவதைக் குறிக்கும் இந்த எல் நினோ நிகழ்வானது உலகளாவிய வானிலை வடிவங்களை முற்றிலுமாக சீர்குலைக்கக்கூடியது என்பதால், தற்போது பெரு நாட்டில் மிகக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அவசர நிலை பிரகடனத்தின் மூலம், மிக அதிக ஆப எதிர்கொள்ளும் லிமா, கஸ்கோ மற்றும் அரேகிபா உள்ளிட்ட முக்கிய பிராந்தியங்களில் உள்ள 796 மாவட்டங்களிலும் ஆபத்துக்களைக் குறைப்பதற்கான அசாதாரண மற்றும் துரித தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு முழு அதிகாரமும் கிடைத்துள்ளது. இதற்கான அவசர உத்தரவில் அந்நாட்டின் இடைக்கால அதிபர் ஜோஸ் மரியா பால்சஜார் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளார். இந்த 60 நாள் அவசரக் கால நடவடிக்கைகளுக்கான நிதி, பொதுப் பொக்கிஷத்திலிருந்து கூடுதல் நிதியாகக் கோரப்படாமல், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் தற்போதைய பட்ஜெட்டிலிருந்தே பயன்படுத்தப்படும் என்றும், உள்ளூர் மற்றும் பிராந்திய அரசுகள் தேசிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை இப்போதே போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும் என்றும் அந்த அரசு ஆணையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.











