மாமல்லபுரம் சப்தகன்னியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் விமரிசை

0
4

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சப்தகன்னியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

மாமல்லபுரம் ஐந்து ரதங்கள் வீதி பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், அப்பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, விநாயகருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகம் நடைபெற்றதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இதையொட்டி சப்தகன்னியம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

வருஷாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிகச் சூழல் நிலவியதுடன், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.