Advertisement

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம்: ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத் தயாரிப்பிற்காகக் கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தில், திண்டுக்கல்லில் உள்ள பிரபல ‘ஏ.ஆர். டெய்ரி ஃபுட்’ நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று 11 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்திற்காக முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டிருந்ததாகத் தற்போதைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இதுகுறித்த ஆய்வக முடிவுகளில், திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தம் பிரிவில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் நெய்யில் வெறும் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்ததும், மீதிப் பக்கத்தில் அடுக்கடுக்கான கலப்படங்கள் இருந்ததும் உறுதியானதைத் தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் திருப்பதி தேவஸ்தானம் உடனடியாகக் கருப்புப் பட்டியலில் சேர்த்தது.

Advertisement

இந்த மெகா முறைகேடு தொடர்பாக ஏற்கனவே ஆந்திர அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி குழு மற்றும் மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடுத்தடுத்துச் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், இதன் பின்னணியில் நடந்துள்ள சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கும் நோக்கில், இன்று (03.06.2026) காலை ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் மற்றும் பிள்ளையார் நத்தத்தில் உள்ள அதன் உரிமையாளர் ராஜசேகர் இல்லத்திற்கு 4 கார்களில் வந்த 12-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக முகாமிட்டனர். இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கி 11 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்து வரும் இந்த அதிரடிச் சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கு விபரங்கள் கைப்பற்றப்பட்டு வருவதால் திண்டுக்கல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement