மறைமலைநகர் மற்றும் செங்கல்பட்டு புறநகர் ரயில் நிலையங்களில் லிப்ட் அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இழுபறியாக நீடித்து வருவதால், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரை ரயில் தடத்தில் தினசரி 60-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றன.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி, வண்டலூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. இந்நிலையங்களில் நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி இல்லாததால், முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.
பயணிகளின் நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் 2024ஆம் ஆண்டு முதல் கட்டமாக வண்டலூர், பொத்தேரி மற்றும் மறைமலைநகர் ரயில் நிலையங்களில் புதிய லிப்ட் அமைக்கும் பணிகளை தொடங்கியது.
ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் மந்தகதியில் நடைபெற்று வருவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே, தெற்கு ரயில்வே அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள லிப்ட் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.




