செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் வாகனம் நிறுத்தப்படும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை கத்திரிக்கோலால் கிழித்தும், டயர்களை குத்தி காற்றை வெளியேற்றியும் சேதப்படுத்தியதாக போக்குவரத்து காவலரின் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுராந்தகம் போக்குவரத்து காவல்துறைக்கு தனி கட்டிடம் இல்லாததால், காவல் நிலைய வளாகத்திலேயே அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய சிறைச்சாலை அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் வாகனம் நிறுத்தப்படும் பகுதியில் வாகனங்களை நிறுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, போக்குவரத்து காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநரான பழனி என்பவர், வாகன இருக்கைகளை கத்திரிக்கோலால் கிழித்தும், டயர்களை குத்தி பஞ்சர் செய்தும் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இருசக்கர வாகனத்தை கத்திரிக்கோலால் சேதப்படுத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




