செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) சார்பில் சிறப்பு தொழில் கடன் மேளா நேற்று (ஜூன் 15) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரப்பன் தொடங்கி வைத்து, தொழில் முனைவோருக்கு அரசின் கடன் திட்டங்கள் மற்றும் நிதி உதவித் திட்டங்களைப் பயன்படுத்தி புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில்களை விரிவுபடுத்தவும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மண்டல மேலாளர் பழனிவேல், செங்கல்பட்டு மாவட்ட பொது மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு கடன் மேளா மூலம் தொழில் முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) கடன் வசதிகள், தொழில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் அரசின் பல்வேறு நிதி ஆதரவு திட்டங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த சிறப்பு தொழில் கடன் மேளா நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
