தாம்பரம் அருகே கௌரிவாக்கத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக GPay மூலம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் உதவி பொறியாளர் பத்மாவதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரைச் சுற்றியுள்ள சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.
முன்னதாக, வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாக பத்மாவதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கையாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பத்மாவதி வேறு ஒருவருடன் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாக கூறப்படும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வைரலாகும் வீடியோவின் உண்மைத் தன்மை, அதில் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
