கட்டுப்பாட்டை இழந்த கார் காவல் உதவி மையத்திற்குள் புகுந்தது

0
2

தாம்பரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கால்டாக்சி கார் காவல் உதவி மையத்திற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்டாக்சி ஓட்டுநரான முகமது ஹனீபா, தனது காரில் வந்த பயணி ஒருவரை பெருங்களத்தூரில் இறக்கிவிட்டு மீண்டும் தாம்பரம் நோக்கி திரும்பி வந்துள்ளார். அப்போது தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது, திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சாலையோரத்தில் அமைந்திருந்த காவல் உதவி மையத்திற்குள் கார் புகுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் முகமது ஹனீபா லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

சம்பவம் நடந்த நேரத்தில் காவல் உதவி மையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் உணவருந்தச் சென்றிருந்ததால், பெரிய அளவிலான விபத்தும் உயிர்சேதமும் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.