செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி டி-மார்ட் அருகே இளைஞர் ஒருவரின் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிஷ் (18) என்ற இளைஞர் பழம் வாங்குவதற்காக மகேந்திரா சிட்டி டி-மார்ட் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது, அவர் நிறுத்தியிருந்த பைக் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிஷ், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் கிடைத்த தகவல்களை ஆய்வு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நான்கு பேர் வாகனத்தை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட வாகனத்தை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.





