செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை தாக்கிய கணவர், தடுக்க வந்த மகனையும் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரியைச் சேர்ந்த வினோத் (38) மற்றும் அவரது மனைவி பிரியங்கா (32) இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிரியங்கா தனது இரண்டு மகன்களுடன் பனையூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வினோத் பனையூரில் உள்ள வீட்டிற்கு வந்து, அங்குள்ள கழிப்பறையில் பதுங்கியிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த பிரியங்காவை அரிவாளால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தாயை காப்பாற்ற முயன்ற இரண்டாவது மகனையும் வினோத் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
பலத்த காயமடைந்த பிரியங்கா மற்றும் அவரது மகன் ஆகியோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள வினோத்தை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.





