செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மற்றும் மகேந்திரா சிட்டி பகுதிகளில் நடைபெற்ற இரண்டு தனித்தனி சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கார்த்திக் (21) என்பவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை முத்து அளித்த புகாரின் பேரில், தாம்பரம் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி சந்திப்பில் நேற்று (ஜூன் 13) அதிகாலை நடைபெற்ற மற்றொரு விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியாம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் (52) என்பவர் உயிரிழந்தார். அவர் சென்ற வாகனத்தின் மீது லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கண்ணனின் மனைவி மாலா அளித்த புகாரின் அடிப்படையில், லாரி ஓட்டுநர் சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்ச்சியாக நடைபெறும் சாலை விபத்துகள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கவும், வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.





