செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தேக்கம்… அமைச்சர் கண்டிப்பு

0
3

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆய்வின்போது மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

அமைச்சர் அருண் ராஜ், விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, இருதய நோயாளிகள் பிரிவு, பொது அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் உள்ள குடிநீர் வசதி, நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதை அமைச்சர் கவனித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு கடுமையாக கண்டித்தார்.

தேங்கியிருந்த கழிவுநீரை உடனடியாக அகற்றி, சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனை வளாகம் முழுவதும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அமைச்சரின் திடீர் ஆய்வு காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இல்லாமல் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.