ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இறக்கவில்லை எனவும், அவர் உயிருடன் ஆனால் பலத்த காயத்துடன் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிரிழக்கவில்லை என்றும், அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நாளிதழ்களின் செய்தி அறிக்கைகளின்படி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், ஒருவேளை அவர் உயிருடன் இல்லாவிட்டால் ஈரான் அரசு மிகச் சிறந்ததொரு ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றும் டிரம்ப் சாடியுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார்.
எனினும், தாக்குதல்களில் காயமடைந்ததாகக் கூறப்பட்ட அவர், பல மாதங்களாகப் பொதுவெளியில் நேரடியாகத் தோன்றாததால் அவர் உயிரிழந்துவிட்டாரா அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளாரா என்பது குறித்து சர்வதேச அளவில் கடுமையான யூகங்களும் குழப்பங்களும் நிலவி வந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் மிகவும் பலத்த காயமடைந்துள்ளார். அவரது உடலின் இடது பகுதி, கை மற்றும் கால் உள்ளிட்ட உறுப்புகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் அவர் உயிருடன் இல்லை என்றால், அந்நாட்டு அரசு உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக மிகச் சிறந்த நாடகத்தை நடத்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய டிரம்ப், ஈரான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்கள் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், மத்திய கிழக்கில் போர் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து அமெரிக்க அதிபரே நேரடியாகக் கருத்து தெரிவித்துள்ளது சர்வதேச அரசியல் மற்றும் ராஜீய வட்டாரங்களில் புதிய அனலைக் கிளப்பியுள்ளது.












