தமிழக பொறியியல் சேர்க்கை 2ம் சுற்று கலந்தாய்வில் 40,299 பேருக்கு நிரந்தர ஒதுக்கீடும், 10,648 பேருக்குத் தற்காலிக ஒதுக்கீடும் என மொத்தம் 50,947 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான (TNEA) இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 50,947 மாணவர்களுக்குக் கல்லூரி ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வின் 2-ம் சுற்றில் பங்கேற்ற மாணவர்களில் 40,299 மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்த விருப்பங்களின் அடிப்படையில் நிரந்தர ஒதுக்கீட்டாணைகள் (Upward Movement Confirmation) வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், 10,648 மாணவர்களுக்குத் தற்காலிக ஒதுக்கீட்டாணைகள் (Provisional Allotment) வழங்கப்பட்டுள்ளன.
தற்காலிக ஒதுக்கீட்டாணை பெற்றுள்ள மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக இறுதி செய்து உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உறுதி செய்யாத மாணவர்களின் இடங்கள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த கட்டக் கலந்தாய்வுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் கலந்தாய்வு நிர்வாகம் எச்சரித்துள்ளது. 3-ம் சுற்று கலந்தாய்விற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.













