விடுதி மாணவர்களின் குறைகளைக் கேட்கத் தொலைபேசி எண் வழங்கப்பட உள்ளதாகத் திருவாரூர் வடுவூர் சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் சமூக நீதி விடுதி மாணவர்களின் தேவைகளை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தொலைபேசி எண் வழங்கப்பட உள்ளதாகத் திருவாரூரில் அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் பகுதியில் உள்ள சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சம்பத் குமார் பேசுகையில், விடுதி மாணவர்களின் உணவின் தரம் மற்றும் இதர தேவைகள் குறித்துக் கேட்டறியப்பட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். மாணவர்களின் குறைகளை நேரடியாகத் தெரிவிப்பதற்காக விரைவில் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என்றும், விடுதிகளில் தவறுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். தமிழகச் சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திடீர் ஆய்வுகள் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், மாநிலத்தின் உரிமைகளை எந்த இடத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்றும், விவசாயிகளுக்குத் தேவையான தீர்வுகளைத் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அதே வேளையில், காவிரிப் பிரச்சினையில் இரு மாநில மக்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் மிகவும் கவனமாகவும் தெளிவுடனும் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழக திருவாரூர் வடக்கு மாவட்டத் தலைவர் மதன் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.













