Home செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம்: நவீன சிசிடிவி கேமராக்கள்

திருக்கழுக்குன்றம்: நவீன சிசிடிவி கேமராக்கள்

0

திருக்கழுக்குன்றம் பகுதியில் போக்குவரத்து மற்றும் சந்தேக நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் முக்கிய சந்திப்புகளில் நவீன சிசிடிவி கேமராக்கள் நேற்று பொருத்தப்பட்டன.

திருக்கழுக்குன்றம் வழியாக சதுரங்கப்பட்டினம் – திருத்தணி சாலை கடந்து செல்கிறது. இந்த சாலை, நகரின் வெளியே புறவழிப்பாதையாக அமைந்துள்ளதால், செங்கல்பட்டு – மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு – கல்பாக்கம் வழித்தடங்களில் செல்லும் ஏராளமான வாகனங்கள் இவ்வழியை பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக ஆசிரியர் நகர் மற்றும் கொத்திமங்கலம் சந்திப்பு பகுதிகளில் திருக்கழுக்குன்றம் போலீசார் ஏற்கனவே சிசிடிவி கேமராக்களை அமைத்திருந்தனர். ஆனால், அவை நாளடைவில் பழுதடைந்ததால் கண்காணிப்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து பழைய கேமராக்களுக்கு மாற்றாக, தற்போது அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வாகனங்கள் அதிவேகமாக சென்றாலும் அதன் பதிவெண்களை துல்லியமாக பதிவு செய்யக்கூடிய ஏ.பி.என். (ABN) அமைப்பு கொண்ட கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கண்காணிப்பு அமைப்பின் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள், சந்தேக நபர்கள் நடமாட்டம் மற்றும் குற்றச்செயல்களை எளிதில் கண்டறிய முடியும் என்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version