செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநர் (Resource Trainer) பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் 24 மாத கால வரையறையுடன் கூடிய தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி, பெண்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாநில வள பயிற்றுநர் பணிக்கு சமூக கல்வி, சமூக அறிவியல், ஊரக வளர்ச்சி, பெண்கள் கல்வி உள்ளிட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் அவசியம். வயது வரம்பு 30 முதல் 45 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு ஏதேனும் ஒரு முழுநேர முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் 4 ஆண்டுகள் அனுபவம் தேவைப்படுகிறது. வட்டார வள பயிற்றுநர் பணிக்கு பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம். வயது வரம்பு முறையே 30-45 மற்றும் 25-45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தகவல் தொடர்புத் திறன், ஒருங்கிணைப்பு திறன், மொபைல் செயலிகள் பயன்பாடு, கணினியில் Word, Excel மற்றும் இணைய பயன்பாட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் சுய சான்றொப்ப நகல்களை இணைத்து 29.06.2026க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://tncdw.org அணுகலாம்





