நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி செய்யும் நாசாவின் நிரந்தர நிலவுத் தளத் திட்டத்தில் இணையுமாறு இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கான நிரந்தரத் தளத்தை நாசா (NASA) அமைத்து வரும் நிலையில், அந்தப் பிரம்மாண்ட திட்டத்தில் இணைந்து செயல்பட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நடைபெற்ற இந்தியா – அமெரிக்கப் பொது விண்வெளி கூட்டுக் குழுவின் 9-வது ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கியமான அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆர்டெமிஸ் ஒப்பந்தத்தின் (Artemis Accords) கீழ் விண்வெளித் துறையில் இரு நாடுகளின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நாசாவின் நிலவுத் தளத் திட்டத்தில் (Moon Base Programme) இஸ்ரோவை இணையுமாறு அமெரிக்கக் குழு கேட்டுக்கொண்டது. நிலவின் தென் துருவத்தில் பனி வடிவில் உறைந்துள்ள நீரைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கான விண்வெளிப் பயணங்களுக்கு நிலவை ஒரு முதன்மைத் தளமாகப் பயன்படுத்துவதே இந்த நிலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஏற்கனவே சந்திரயான்-3 விண்கலத்தைச் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி இந்தியா படைத்த உலகச் சாதனையும், NISAR செயற்கைக்கோள் திட்டத்தில் நிலவும் தொழில்நுட்பக் கூட்டணியுமே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பிற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.













