உலகப் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI), தனது புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப வல்லுநர் உதய் ருத்தராஜூவை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
சாட் ஜிபிடி (ChatGPT) மற்றும் சோரா (Sora) உள்ளிட்ட புரட்சிகர ஏஐ தொழில்நுட்பங்கள் மூலம் உலக சந்தையில் முன்னணியில் இருக்கும் ஓபன் ஏஐ, தனது அடுத்தகட்ட உலகளாவிய விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்த அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
ஏஐ சந்தையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்கவும், அடுத்த தலைமுறை ஏஐ மாடல்களை வடிவமைக்கவும் நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தலைமையிலான குழு இந்த நியமனத்தை செய்துள்ளது.
புதிய சிடிஓ ஆகப் பொறுப்பேற்றுள்ள உதய் ருத்தராஜூ, இதற்கு முன் சிலிக்கான் வேலி நிறுவனங்களின் உயர் தொழில்நுட்பப் பிரிவுகளிலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சிப் பிரிவிலும் (Advanced AI Research) முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாஃப்ட் சத்யா நாதெல்லா, கூகுள் சுந்தர் பிச்சை ஆகியோரது வரிசையில் தற்பொழுது ஓபன் ஏஐ நிறுவனத்தின் உயரிய பொறுப்புக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உதய் ருத்தராஜூ தேர்வாகியிருப்பது உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் இந்தியர்களுக்கான அங்கீகாரத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.













