கூடலூர் ஏரியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு; போலீசார் தீவிர விசாரணை

0
2

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கூடலூர் ஏரியில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் ஊராட்சியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிராம மக்கள் சிலர், வலை வீசியபோது சேற்றுப் பகுதியில் இருந்து மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு போன்றவை சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக மேல்மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓட்டை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கூடலூர் ஊராட்சியைச் சேர்ந்த வெங்கடேசன் (52) என்ற நபர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது ஏரியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு அவரது உடலா அல்லது வேறு யாருடைய உடலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், எலும்புக்கூட்டின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக தடயவியல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே சம்பவத்தின் உண்மை நிலை தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.