Home செங்கல்பட்டு பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லை: பொதுமக்கள் கோரிக்கை

பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லை: பொதுமக்கள் கோரிக்கை

0

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், தினமும் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இடைக்கழிநாடு பேரூராட்சியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான எல்லையம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிறுத்தத்தை, நயினார்குப்பம், முதலியார்குப்பம், தழுதாளிகுப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக சென்னை, புதுச்சேரி மற்றும் பிற பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இந்த நிறுத்தம் முக்கிய மையமாக உள்ளது.

ஆனால், பேருந்து நிறுத்தத்தில் அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர் வசதி இல்லாததால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கோடை வெயிலில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீர் இல்லாமல் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

உள்ளூர் மக்கள் கூறுகையில், பேருந்து நிறுத்தத்தில் தினசரி ஏராளமான பயணிகள் பயன்படுத்தினாலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, குடிநீர் தொட்டி அல்லது குடிநீர் குழாய் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, இடைக்கழிநாடு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையை கவனத்தில் கொண்டு, எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version