தலைநகர் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, மக்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சென்னை ஒன்’ (Chennai One) ஒருங்கிணைந்த மொபைல் செயலி, தற்போது 2 கோடிப் பயணங்களைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
சென்ன பெருநகரப் போக்குவரத்து வளர்ச்சிக் குழுமம் (CMMDA) மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பால் (CUMTA) நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தச் செயலி மூலம், ஒரே இடத்தில் மாநகரப் பேருந்துகள் (MTC), சென்னை மெட்ரோ ரயில் (CMRL) மற்றும் தெற்கு ரயில்வேயின் புறநகர் மின்சார ரயில்களுக்கான (Suburban Trains) பயணச் சீட்டுகளை (Tickets) பயணிகள் சிரமமின்றிப் பெற்று வருகின்றனர்.
சென்னை ஒன் செயலியின் முக்கியச் சிறப்பம்சங்கள்:
ஒருங்கிணைந்த பயணச் சீட்டு (Single Ticketing): வெவ்வேறு போக்குவரத்துச் சேவைகளுக்காகத் தனித்தனியாக வரிசையில் நிற்பதையோ அல்லது பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துவதையோ தவிர்த்து, ஒரே செயலி மூலம் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களுக்கான டிஜிட்டல் டிக்கெட்டுகளைச் சில நொடிகளில் பெற முடிகிறது.
நேர மேலாண்மை மற்றும் விரைவுப் பயணம்: டிஜிட்டல் கட்டணச் செலுத்துதல் முறை மூலம் பயணிகளின் காத்திருப்பு நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், தினசரி பணிக்குச் செல்வோர் மற்றும் மாணவர்களின் பயணம் மிகவும் விரைவாகவும் எளிதாகவும் மாறியுள்ளது.
மக்களிடையே அதிகரித்த வரவேற்பு: தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே 2 கோடிக்கும் அதிகமான பயணங்கள் இந்தச் செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட்டிருப்பது, சென்னை மக்களிடையே டிஜிட்டல் போக்குவரத்து சேவைகளுக்கான மாபெரும் வரவேற்பை உறுதி செய்துள்ளது.
சென்னையை ஒரு நவீன ஸ்மார்ட் நகரமாக மாற்றும் முயற்சியில், பொதுப் போக்குவரத்தைப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் ‘சென்னை ஒன்’ செயலி ஆற்றி வரும் பணி மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. வரும் நாட்களில் கூடுதல் வசதிகளுடன் இந்தச் செயலி மேலும் மேம்படுத்தப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.













