Home செங்கல்பட்டு செங்கல்பட்டு RTO அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை; ரூ.40,000 பறிமுதல்!

செங்கல்பட்டு RTO அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை; ரூ.40,000 பறிமுதல்!

0

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.40,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், புதிய வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம், தகுதிச்சான்று உள்ளிட்ட சேவைகளுக்காக பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் எழுந்து வந்தன.

இதையடுத்து, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சக்கரபாணி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மதியம் 12 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனை இரவு 7 மணி வரை நீடித்தது.

சோதனையின் போது, அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.40,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஜி-பே (GPay) உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், செங்கல்பட்டு RTO அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version