குரோம்பேட்டை, சித்தாமூர், மாமல்லபுரம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்த நிலையில், கல்லூரி மாணவர் ஒருவர் மாயமாகியுள்ளார்.
🚆 கல்லூரி முதல் நாளே மாணவி உயிரிழப்பு
குரோம்பேட்டை நாயுடு ஹால் தெருவைச் சேர்ந்த சீனிவாசனின் மகள் ராஜஸ்ரீ (18), பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்திருந்தார். கல்லூரி படிப்பை தொடங்க இருந்த முதல் நாளில், காலை 6:45 மணியளவில் வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, எழும்பூர் நோக்கிச் சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி உயிரிழந்தார். போலீஸார் உடலை மீட்டு தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
🌾 கிணற்றில் விவசாயி சடலமாக மீட்பு
சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி சிங்காரம் (56), நேற்று முன்தினம் மாலை வயல்வெளிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் இரவு தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் ஜெயராமனுக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்த சித்தாமூர் போலீஸார் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
🌊 கடலில் கல்லூரி மாணவர் மாயம்
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அலோக் குமார் (20), காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்து வந்தார். நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்ற இவர், அதிகாலை 3:30 மணியளவில் நெம்மேலி கடலில் குளித்தபோது மாயமானதாக கூறப்படுகிறது. மாமல்லபுரம் போலீஸார் கடலோர பாதுகாப்பு குழுவுடன் இணைந்து தேடி வருகின்றனர். மேலும், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, சோழிங்கநல்லூர் காந்திநகர் பகுதியில் உள்ள அறையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். செம்மஞ்சேரி போலீஸார் உடலை மீட்டு, அவரது அடையாளம் மற்றும் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.










