மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமாருக்கு சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மெட்ராஸ் மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், உயர்நீதிமன்றம் மட்டும் இன்னும் ‘மெட்ராஸ் ஐகோர்ட்’ என்றே அழைக்கப்பட்டு வருவதை மாற்றி, அதனைத் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்குத் தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் மொழி, இனம் மற்றும் வரலாற்று உரிமைகளை நிலைநாட்டும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர் நிர்மல்குமாருக்கு சி.வி.சண்முகம் விடுத்துள்ள கோரிக்கையில், தியாகி சங்கரலிங்கனாரின் தியாகம் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மூலம் சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டுப் பொன்விழா ஆண்டையும் கடந்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், ஆங்கிலேயர் காலத்து காலனித்துவப் பெயரான ‘மெட்ராஸ்’ என்ற பெயரிலேயே உயர்நீதிமன்றம் தொடர்ந்து இயங்கி வருவது வரலாற்றுப் பெருமிதத்திற்கு உகந்ததாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றுவதற்கு ஏதுவாக, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அரசு சார்பில் ஒருமனதாகத் தனித் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் உணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வரும் இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் இந்த அதிரடி நிலைப்பாடு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.













