சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, கல்லூரி நாட்கள் மற்றும் தனது அகரம் அறக்கட்டளைக்குக் கல்லூரி செய்து வரும் உதவிகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட நடிகர் சூர்யா உட்பட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் சூர்யா, 30 ஆண்டுகள் கழித்து லயோலா கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைத்தபோது பழைய நினைவுகள் அனைத்தும் மீண்டும் கண்முன்னே வந்து சென்றதாகக் கூறி நெகிழ்ச்சியடைந்தார். தான் 1995-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ‘பேட்ச்’ மாணவர் என்பதைக் குறிப்பிட்ட அவர், இங்கு B.Com முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையில் ஏதாவது பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமக்கு இருந்ததாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், லயோலா கல்லூரி வெறும் படிப்பை மட்டும் கற்றுத் தரவில்லை என்றும், மனித வாழ்க்கையின் மதிப்பீடுகளையும் நடைமுறைகளையும் கற்றுக்கொடுத்த இடம் என்றும் புகழாரம் சூட்டினார். “யாராவது என்னைப் பார்த்து என்ன படித்திருக்கிறீர்கள் எனக் கேட்டால் B.Com Loyola என்று சொல்வதில் இன்றளவும் பெருமை கொள்கிறேன்” என்று பேசினார். அத்துடன், தமது ‘அகரம் ஃபெளண்டேஷன்’ அமைப்பிற்கு லயோலா கல்லூரி தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருவதற்காகக் கல்லூரி நிர்வாகத்திற்குத் தனது மனமார்ந்த நன்றியையும் சூர்யா தெரிவித்துக் கொண்டார்.













