தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் 3 செய்திச் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாகப் பரவிய தகவல் தவறானது என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சில செட்-ஆப் பாக்ஸ்களில் மட்டுமே தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV) ஒளிபரப்பில் இருந்து 3 தனியார் செய்திச் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
அரசு கேபிளில் பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24×7 மற்றும் தமிழ் ஜனம ஆகிய 3 செய்திச் சேனல்களின் ஒளிபரப்பு முடக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துத் தங்களது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ள தகவல் சரிபார்ப்பகம், “அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து எந்தவொரு தனியார் செய்திச் சேனல்களும் நீக்கப்படவில்லை. தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாகத் தற்காலிகமாகச் சில குறிப்பிட்ட செட்-ஆப் பாக்ஸ்களில் (Set-Top Boxes) மட்டுமே இந்த ஒளிபரப்புத் தடை ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்துச் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ‘மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ (Mantra Industries Limited) நிறுவனம் மூலமாகப் பழுதுபார்க்கும் பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்விதக் கட்டண நிலுவையோ அல்லது அரசியல் காரணங்களோ இந்தத் தற்காலிகத் தடைக்குப் பின்னணியில் இல்லை என்றும், விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் வழக்கம் போல் அலைவரிசைகள் சீராகக் கிடைக்கும் என்றும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
