Home செங்கல்பட்டு “பதவி போனா என்ன? தவெக-வில் ஐக்கியம்!” – எடப்பாடி கூடாரத்தை காலி செய்த மாஜி எம்எல்ஏக்கள்:

“பதவி போனா என்ன? தவெக-வில் ஐக்கியம்!” – எடப்பாடி கூடாரத்தை காலி செய்த மாஜி எம்எல்ஏக்கள்:

0

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கூட்டணி ஆட்சியில், அதிமுக தரப்பிலிருந்து வென்று வெறும் 21 நாட்களே ஆன மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா மற்றும் பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய மூவரும் சபாநாயகரைச் சந்தித்துத் தங்களது உத்தியோகபூர்வ ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

அதன் பின்னர், தலைமைச் செயலக வளாகத்திலேயே மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்துத் தங்களை அதிகாரப்பூர்வமாகத் தவெக-வில் இணைத்துக் கொண்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவின் வலிமையான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “துயரசக்தி” என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “குதிரை பேர கலாச்சாரம்” என்றும் கடுமையான கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இது மக்கள் முன்னிலையில் நடந்த வெளிப்படையான அரசியல் முடிவு என்றும், இதில் கதறுவதற்கு எதுவுமில்லை என்றும் சாடியுள்ளார். இந்த அதிரடி கட்சித் தாவலைத் தொடர்ந்து, காலியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த மூன்று தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version