ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளை தூய்மையாக பராமரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் ‘ஸ்வச்சதா’ (Swachhata) தூய்மை இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தெற்கு ரயில்வே தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் ரயில்வே வளாகங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில், இந்திய ரயில்வே கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ‘ஸ்வச்சதா’ தூய்மை இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது 18 ரயில்வே மண்டலங்களில் இந்த திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 முதல் 15 வரை சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயின் ஆறு கோட்டங்கள், மூன்று பணிமனைகள் மற்றும் 439 ரயில் நிலையங்களில் விரிவான தூய்மை பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளப் பகுதிகளை சுத்தப்படுத்துதல், பயணிகளிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முயற்சிகளின் அடிப்படையில், 2025ஆம் ஆண்டிற்கான ‘ஸ்வச்சதா’ தூய்மை திட்ட செயல்பாட்டில் தெற்கு ரயில்வே நாடு முழுவதும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான இந்த தரவரிசையில், Northeast Railway முதலிடத்தையும், North Western Railway இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன.
தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தெற்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.
