மாமல்லபுரத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மற்றும் அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பெண் காவலர்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை நேரில் சந்தித்து, அவசர உதவி எண்கள், பெண்கள் பாதுகாப்பு சேவைகள் மற்றும் காவல்துறையின் சிறப்பு உதவி மையங்கள் குறித்த தகவல்களை எடுத்துரைத்தனர். மேலும், பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
