தாம்பரத்தில் ‘ரேபிடோ’ ஆட்டோ பயணத்தின் போது கூடுதல் கட்டணம் கேட்டு, இந்திய கடற்படை அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தாம்பரம், மீனாட்சி நகர், ஜி.ஆர். அவென்யூவைச் சேர்ந்த ஆதித்யா சுமுக்லா (32), இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக புனேயில் பணியாற்றி வருகிறார். மூன்று நாட்கள் விடுப்பில் சொந்த ஊரான தாம்பரத்திற்கு வந்திருந்தார்.
நேற்று அதிகாலை 2.00 மணியளவில் வீட்டிற்குச் செல்வதற்காக, மேற்கு தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ‘ரேபிடோ’ செயலி மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்துள்ளார்.
அப்போது வந்த ஆட்டோ ஓட்டுநர், மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார் (24), செயலியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமார், கடற்படை அதிகாரி ஆதித்யா சுமுக்லாவை கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆதித்யா சுமுக்லா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
