Home செங்கல்பட்டு நீட் தேர்வு பயம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான செய்தி அனுப்பிவிட்டு கோவையில் மாணவி தற்கொலை!

நீட் தேர்வு பயம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான செய்தி அனுப்பிவிட்டு கோவையில் மாணவி தற்கொலை!

0

கோவை குனியமுத்தூர் அருகே நீட் தேர்வு பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 19 வயது இளம் மாணவி ஒருவர் தனது உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை புதூர் பார்க் டவுன் நகரைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்க மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருந்தார். சிறு வயது முதலே மருத்துவராகி ஏழை – எளிய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த அனுகீர்த்தனா, நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த ஆண்டு தீவிரமாகப் படித்துத் தேர்வும் எழுதி இருந்தார். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக அவர் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்த சூழலில், கடந்த முறை எழுதப்பட்ட நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அனுகீர்த்தனாவை கடுமையான சோர்விலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. மீண்டும் தேர்வு எழுதினால் என்னால் தேர்ச்சி பெற முடியுமா, நினைத்த மதிப்பெண் கிடைக்குமா என்ற அச்சம் நாளுக்கு நாள் அவரிடம் அதிகரித்து, கடுமையான மன உளைச்சலாக மாறி உள்ளது.

இதற்கு இடையே, அவரது தந்தைக்கும் டாஸ்மாக் வேலையில்லாமல் போனது. இதன் காரணமாக ஏற்கனவே தனது நீட் பயிற்சிக்காகத் தந்தை லட்சக்கணக்கில் செலவு செய்து விட்டு, தற்போது வருமானமின்றி தவிப்பதை எண்ணி அந்த மாணவி மேலும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை அனுகீர்த்தனா தனது சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு நீண்ட உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேரக் காத்துக் கொண்டு இருந்தேன், ஆனால் தேர்வை ரத்து செய்து விட்டார்கள் என்றும், இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது, தந்தை எனக்காக நிறைய செலவு செய்து விட்டார்கள், இனிமேல் அவர்கள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன் என்று தெரியவில்லை எனவும் மன வருத்தத்தோடு பதிவிட்டு இருந்தார்.

அதிகாலையில் இந்த வாட்ஸ்-அப் தகவலைப் பார்த்துப் பதறி அடித்து ஓடிவந்த உறவினர்கள், அனுகீர்த்தனாவின் அறைக் கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது, அவர் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவசரச் சிகிச்சை அளித்தும், பலனின்றி அனுகீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலைப் பார்த்துக் குடும்பத்தினரும் கதறி அழுது கண்ணீரில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் செல்போனைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு குளறுபடிகளால் கோவையில் மேலும் ஒரு மாணவியின் மருத்துவக் கனவு தற்கொலையில் முடிந்து உள்ள இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் கல்வி வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

Exit mobile version