செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள தைலாவரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகக் கூறி மது பிரியர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மது வாங்க வந்த சிலர், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, கடை விற்பனையாளர்களிடம் விளக்கம் கேட்டனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மது பிரியர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, நிலைமையை சுமுகமாக்கி, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய சில மது பிரியர்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் பல டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூல் நடைமுறைகள் தொடர்வதாக வேதனை தெரிவித்தனர். அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தைலாவரம் டாஸ்மாக் கடையில் கூடுதல் வசூல் நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
