செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் இடையே நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 68 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதால், குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சாலையை அகலப்படுத்தி 6 வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வைத்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு நகருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், நகரை சுற்றி சுமார் 12 கிலோமீட்டர் நீளத்தில் புதிய புறவழிச்சாலை (Bypass Road) அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டால், நீண்ட தூர வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் நேரடியாக பயணிக்க முடியும்.
திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் இறுதி அனுமதி கிடைத்தவுடன் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், செங்கல்பட்டு – திண்டிவனம் வழித்தடத்தில் போக்குவரத்து சீராகும் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
