செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு தாலுகாவுக்குட்பட்ட ராட்டின கிணறு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் இந்த மதுபானக் கடையால் சமூக பாதிப்புகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள், பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர். மேலும், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மற்றொரு அரசு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானக் கடையால் பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், கடையை குடியிருப்பு பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், செங்கல்பட்டு நகர் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானக் கடையால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும், சமூக அமைதி பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த போராட்டங்களால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீர்செய்ய முயன்றனர்.
