செங்கல்பட்டு மாவட்டத்தில் தனித்தனியாக நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு சம்பவத்தில் இளைஞரிடம் கத்தி முனையில் பைக் பறிக்கப்பட்ட நிலையில், மற்றொரு சம்பவத்தில் தனியார் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
மதுராந்தகம் அருகே உள்ள மலைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (19) என்பவர் கானா பாடகர் ஆவார். வந்தவாசி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடிவிட்டு, இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மலைப்பாளையம் அருகே வந்தபோது, மூன்று பேர் அவரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. கத்தியை காட்டி மிரட்டிய அவர்கள், “பைக்கை விட்டுவிட்டு ஓடிவிடு” என மிரட்டியுள்ளனர். உயிர் பயத்தில் பிரவீன் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிய நிலையில், மர்ம நபர்கள் பைக்கை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக பிரவீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த கவுதம் (26) என்பவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் கேளம்பாக்கம் புறவழிச்சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, கேளம்பாக்கம் மேம்பாலம் பகுதியில் வேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஆட்டோ கடுமையாக நசுங்கியதுடன், அதற்குள் சிக்கிய கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வழக்குகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
