Home செங்கல்பட்டு அரசு பேருந்தின் அடியில் சிக்கிய கூரியர் ஊழியர்!

அரசு பேருந்தின் அடியில் சிக்கிய கூரியர் ஊழியர்!

0

செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்தின் பின்னால் ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஸ்கூட்டர் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட போதிலும், இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (22), தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கோவளம் பகுதியில் பொருட்கள் விநியோகம் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலை வழியாக கானத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அங்கு நின்றிருந்த அரசு பேருந்தின் பின்னால் அவரது ஸ்கூட்டர் எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் ஸ்கூட்டர் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டது.

எனினும், சுரேஷ் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதால் பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் உயிர்தப்பினார். இந்த விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சுரேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது உயிரிழப்புகளைத் தடுக்க உதவும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

NO COMMENTS

Exit mobile version